29 மார்ச் 2024
மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸாக உயரும் சம்பளம்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸாக உயரும் சம்பளம்!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அகவிலைப்படியை உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனினும் அதுபற்றிய தகவல் கசிந்துள்ளது.

ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த மோடி அரசு முடிவு செய்துள்ளது. ஏற்ககெனவே இருக்கும் அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்படும்.

அகவிலைப்படி என்பது ஆண்டுக்கு இரு முறை உயர்த்தப்படுகிறது. இது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அறிவிக்கப்படும். இருப்பினும், இந்த அறிவிப்பு ஒவ்வொரு ஆண்டும் தாமதமாக வருகிறது. இம்முறை ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வுக்கான தீர்மானம் மார்ச் மாதம் எடுக்கப்படுகிறது. அதேபோல, ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த முடிவு செப்டம்பர்-அக்டோபரில் வெளிவர வாய்ப்புள்ளது.

ஹோலி பண்டிகைக்கு முன்னதாக இது தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹோலிக்குப் பிறகு, நிதி அமைச்சகம் அதன் அறிவிப்பை வெளியிடும். மார்ச் மாத சம்பளத்தை உயர்த்தி அகவிலைப்படி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், ஊழியர்களுக்கு 2023 ஜனவரி மற்றும் பிப்ரவரிக்கான இரண்டு மாத நிலுவைத் தொகையும் கிடைக்கலாம்.

4 சதவீத அதிகரிப்புடன் அகவிலைப்படி 42 சதவீதமாக உயரும். இது ஜனவரி 2023 முதல் அமலுக்கு வரும். இதன் மூலம் மார்ச் மாத சம்பளத்துடன் இரண்டு மாத நிலுவைத் தொகையும் ஊழியர்களுக்கு கிடைக்கும். 18,000 ரூபாய் அடிப்படை சம்பளத்தில் மாதம் 720 ரூபாய் அதிகரிக்கப்படும். அதாவது, இரண்டு மாதங்களுக்கு 1440 ரூபாய். லட்சக்கணக்கான ஓய்வூதியர்களுக்கு ஹோலி பரிசு வரவிருக்கிறது.